September 29, 2024
கால்பந்து

கத்தாரில் தொடங்கியது 2022 FIFA உலகக்கோப்பை ..!!

Football

சர்வதேச கால்பந்து சமமேளமான பிபா நடத்தும் 22வது பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் 20ஆம் தேதி முதல் டிசம்பர் 18 வரை கத்தாரில் நடைபெறுகிறது. கால்பந்து போட்டிக்காக கத்தாரில் 8 மைதானங்கள் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளன.

உலக அளவில் அதிகமான விளையாட்டு ரசிகர்களை கொண்ட கால்பந்து விளையாட்டின் மிகப் பெரிய திருவிழாவாக பிபா உலகக் கோப்பை தொடர் உள்ளது. கடந்த 2010ஆம் போட்டியை நடத்தும் நாட்டை தேர்வு செய்வதற்கான ஏலத்தில் 2022ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து தொடரை நடத்தும் வாய்ப்பை கத்தார் பெற்றது.

கடந்த ஒரு மாதம் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்துள்ளது. இதைத்தொடர்ந்து தற்போது விளையாட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக பிபா கால்பந்து உலகக் கோப்பை தொடர் நடைபெறவுள்ளது.

இதன்மூலம் முதல் முறையாக மத்திய கிழக்கு நாடான கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரை நடத்துகிறது. சுமார் 1 மாத காலம் வரை நடைபெற இருக்கும் இந்த தொடரில் மொத்தம் 32 அணிகள் பங்கேற்கின்றன. மொத்தமாக 64 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.

இந்த அணிகள் எட்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. அதன்படி அணிகளின் விவரம் பின்வருமாறு:

குரூப் ஏ பிரிவு – தொடரை நடத்தும் கத்தார், ஈக்வடார், செனகல், நெதர்லாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

குரூப் பி பிரிவு – இங்கிலாந்து, ஈரான், அமெரிக்கா, வேல்ஸ்

குரூப் சி பிரிவு – அர்ஜெண்டினா, சவுதி அரேபியா, மெக்சிகோ, போலந்து

குரூப் டி பிரிவு – பிரான்ஸ், ஆஸ்திரேலியா, டென்மார்க், துனிஷியா

குரூப் இ பிரிவு – ஸ்பெயின், கோஸ்டா ரிகா, ஜெர்மனி, ஜப்பான்

குரூப் எஃப் – பெல்ஜியம், கனடா, மொராக்கோ, குரோஷியா

குரூப் ஜி – பிரேசில், செர்பியா, சுவிட்சர்லாந்து, கேமரூன்

குரூப் எச் – போர்ச்சுகல், கானா, உருகுவே, தென் கொரியா

ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் ரவுண்ட் ராபின் முறையில் லீக் போட்டிகளில் மோதிக்கொள்ளும். இதில் லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும்.

வரும் டிசம்பர் 3ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை நடைபெறும் நாக் அவுட் சுற்றில் மொத்தம் 16 அணிகள் கலந்து கொள்ளும். இந்த சுற்றில் வெற்றி பெறும் 8 அணிகள் கால் இறுதி போட்டிகளில் பலப்பரீட்சை நடத்தும்.

கால் இறுதி சுற்று டிசம்பர் 9 மற்றும் 10ம் தேதிகளிலும், அரை இறுதி ஆட்டங்கள் டிசம்பர் 13 மற்றும் 14ஆம் தேதிகளிலும் நடைபெறுகின்றன. 2022ஆம் ஆண்டின் சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் இறுதி போட்டி 18ஆம் தேதி லுசைல் மைதானத்தில் நடைபெற உள்ளது.

உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவின் தொடக்க ஆட்டம் வரும் 20ஆம் தேதி 60 ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் கட்டப்பட்டுள்ள அல்-பேத் மைதானத்தில் நடைபெறுகிறது.முதல் போட்டியில் தொடரை நடத்தும் கத்தார் – ஈக்வேடார் அணிகள் மோதவுள்ளன.

உலகம் முழுவதும் இருந்து சுமார் 12 லட்சம் ரசிகர்கள் கால்பந்து போட்டியை காண்பதற்கு கத்தாருக்கு வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கால்பந்து திருவிழாவை காணவரும் பார்வையாளர்களை உற்சாகப்படுத்துவதற்காக 90 வகையான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கும் கத்தார் அரசு ஏற்பாடு செய்துள்ளது. வழக்கமாக உலகக் கோப்பை தொடர் ஜூன், ஜூலை மாதங்களில்தான் நடத்தப்படும். ஆனால் இந்த மாதங்களில் கத்தாரில் 40 முதல் 50 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவும் என்பதால் குளிர்காலத்தில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

இதன் மூலம் குளிர்காலத்தில் நடத்தப்படும் முதல் உலகக் கோப்பை தொடராக இந்த தொடர் அமைந்துள்ளது. உலகக்கோப்பை கால்பந்து தொடருக்காக 220 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் 8 கால்பந்து மைதானங்கள் கத்தாரில் கட்டப்பட்டுள்ளன.

அத்துடன் விமான நிலைய விரிவாக்கம், மெட்ரோ ரயில், நெடுஞ்சாலை, நட்சத்திர விடுதிகள் என கடந்த 10 ஆண்டுகளில் அங்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வரலாற்றிலேயே அதிக பொருள் செலவில் நடத்தப்படும் என்ற உலகக் கோப்பை கால்பந்து தொடர் என்ற பெருமையை பெறுகிறது.

இதற்கு முன்னர் அதிகபட்சமாக 2018ஆம் ஆண்டு ரஷ்யா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்காக 14 பில்லியன் டாலர் செலவு செய்திருந்தது. தற்போது அதை விட பல மடங்கு செலவு செய்து கத்தார் நாடு கால்பந்து தொடரை நடத்துகிறது.

tamilinzone.com

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service

PROS

+
Add Field

CONS

+
Add Field
Choose Image
Choose Video
X